Chicken with plums – அறுந்த நரம்புகள்....


alone
1958, டெஹ்ரான்...
வெறுமை சூழ்ந்தழுத்தும் பாதையில் சோகநடை போட்டுக் கொண்டிருக்கிறான் ஈரானின் மிகச்சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவனான நசீர் அலி. டார்(Tar) எனும் ஈரானிய இசை வாத்தியத்தை வாசிப்பதில் வல்லவனான நசீர் அலி இசையையே தன் தொழிலாகவும் உயிராகவும் மதிப்பவன். தனது கருவி கையிலிருக்கும் போது குடும்பமோ கடமைகளோ அவனுக்குத் தெரிவதில்லை. தனது வாத்தியம் எழுப்பும் இசை ஒன்றே அவன் உணரக்கூடியது. குடும்பச் சண்டை ஒன்றில் அவன் மனைவி அவனது வாத்தியத்தை உடைத்து விட, மனமுடைந்து போய் சோகத்தில் வீழ்கிறான் நசீர் அலி.
உடைந்து போன தன் வாத்தியத்திற்கு மாற்றுத் தேடி வாத்தியக் கருவிகளை விற்கும் மிர்சா என்பவனது கடைக்குச் செல்கிறான் நசீர் அலி. மிர்சா நசீர் அலியின் வருகையால் உளமகிழ்ந்து போகிறான். அங்கிருக்கும் வாத்தியத்தை வாசித்துப் பார்த்தும் திருப்தி ஏற்படாத நசீரிடம் தனது கடையின் ஈரப்பதமே வாத்தியத்தின் அபஸ்வரத்திற்குக் காரணம் என்று கூறி ஒரு வாரம் உலர்வான இடத்தில் வைத்திருந்து வாசித்துப் பார்க்குமாறு கேட்கிறான். ஆனால் ஒரு வாரம் கழித்தும் நசீருக்கு அந்த வாத்தியம் திருப்தி தருவதாயில்லை. கோபத்தோடு மிர்சாவிடம் போகும் அவனை சமாதானப்படுத்தும் மிர்சா, அவனுக்கு மற்றொரு வாத்தியத்தைக் கொடுத்து அனுப்புகிறான்.
ஒரு மாதமும், நாலு வாத்தியங்களும் கழித்தும் நசீருக்கு எந்த வாத்தியத்திலும் திருப்தியில்லை. தன் உயிரினும் மேலாக அவன் கருதி வந்த வாத்தியத்திற்கு மாற்றுக் கிடைக்காமல் அவனுக்கு கோபமும் ஆற்றாமையுமே மிஞ்சுகிறது. வாழ்க்கையில் பிடித்தம் கொள்ள அவனுக்கிருந்த ஒரே காரணமான அவனது இசைக்கருவி உடைந்ததில் மனம் உடைந்து போய் கண்ணீர் சிந்தி விரக்தியில் இருக்கும் அவனை அடுத்த நாள் சந்திக்கிறான் அவனது நண்பன் மனுச்சர். விரக்தியோடே பேசும் தன் நண்பனிடம் வாழ்வதற்கு உயிரோடு இருந்தால் மட்டும் இருந்தால் போதாது என்று வேதாந்தம் பேசும் அவன், நசீரின் உடல்நிலை குறித்து கவலையோடு விசாரிக்கிறான். பேச்சை அரசியலை நோக்கித் திருப்பியும் தன் நண்பனிடம் இருந்து எந்த பதிலும் வராததைக் காணும் மனுச்சர் நசீரின் கவலைக்கான காரணத்தை அறிந்துகொள்கிறான். பின்னர் மசாத் என்னுமிடத்தில் கடை வைத்திருக்கும் தன்னுடைய நண்பன் ஒருவனிடம் இருக்கும் டார் கருவியைப் பற்றிக் கூறி, நசீரை அங்கே போகச் சொல்லுகிறான்.
சில நாட்கள் கழித்து மசாத் கிளம்பத் தயாராகும் நசீருக்கும் அவன் மனைவிக்கும் அவர்களது இளைய மகனை யார் கவனித்துக் கொள்வது என்பது குறித்தான வாக்குவாதம் முற்றுகிறது. தனியாகவே போவேன் என்று சூளுரைத்துவிட்டு தன் மகனுடன் புறப்புடுகிறான் நசீர். பேருந்துப் பயணம் மகனின் ஆர்ப்பாட்டத்திலும், அவனது இடைவிடாத பாடலிலும், கண்ணுறங்கா இரவிலும், பேருந்தின் குலுக்கலிலும் கழிகிறது. மசாத் சென்றடையும் நசீர் அரைச்செவிடாகவே போய்ச் சேருகிறான். மனுச்சரின் நண்பன் ஹௌசாங்கை சந்திக்கும் நசீருக்கு சிறிது ஓபியம் தந்து சாந்தப்படுத்துகிறான் ஹௌசாங். ஹௌசாங் கொடுக்கும் வாத்தியத்தை வாசித்துப் பார்க்கும் நசீர் பரம திருப்தி அடைகிறான்.
cwp_025 - Copy
டெஹ்ரான் வந்தடைந்த மறுநாள் காலை, காதலியைக் காணச் செல்லும் காதலன் போல தன்னை அலங்கரித்துக் கொள்ளும் நசீர், வீட்டில் யாருமில்லாத தருணத்தில் தன் புதிய டார் வாத்தியத்தை காதலுடன் வாசிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் கல்யாணத்துடன் கலையும் கனவுகளைப் போல அதிலிருந்து வரும் இசை சிறிது சிறிதாக அபஸ்வரமாவதைக் கேட்டு மனமுடைந்து போகிறான். அவனது உயிருக்குயிரான வாத்தியத்தை பறிகொடுத்த சோகம் முழுமையாகத் தாக்க பட்டினி கிடந்தே தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வருகிறான் நசீர். எட்டு நாட்களில் இறந்தும் போகிறான்.
விரக்தியின் விளிம்பில் உருண்டு கொண்டிருக்கும் நசீரைக் காண வருகிறாள் அவனது செல்ல மகள் பர்சானா. தனது தந்தையின் உடல்நிலையைப் பற்றி அக்கறையோடுcwp_030 - Copy விசாரிக்கும் அவளை அன்போடு அழைத்து அன்று பள்ளிகூடத்தில் நடந்தவை பற்றிக் கேட்கிறான் நசீர். தேர்வு ஒன்றில் இரண்டு மதிப்பெண் குறைந்ததைப் பற்றிக் கவலையுடன் பேசும் அவள் தன் தாய் இதனால் திருப்தியுறவில்லை எனக் கூறுகிறாள். மேலும் வெற்றியின் அவசியம் குறித்து தனக்கு தாயால் போதிக்கப்பட்டதை ஒப்பிக்கும் அவளைக் காணும் நசீருக்கு சிறிது காலத்திற்கு முன் அவள் குதூகலமாக விளையாடிய பொழுதுகள் நினைவுக்கு வந்து கவலையைத் தருகிறது. சிறிது நேரத்தில் வீதியில் விளையாடப் போகிறாள் பர்சானா. வீதியில் அவள் கண்ணாமூச்சி விளையாடும் பொழுது அவள் உதிர்க்கும் “உன்னைக் கண்டுபிடித்து விட்டேன்” எனும் சொற்கள் அவனுக்கு நெருங்கும் மரணத்தை நினைவுறுத்த, மரணபயம் மேலோங்க வாத்தியத்தை இன்னொரு முறை வாசித்துப் பார்த்து மறுபடி விரக்திக்குள்ளாகிறான் நசீர். முதல் நாள் கழிகிறது.
கணவன் அறையை விட்டு வெளியே வராமலும் உணவு எதுவும் உட்கொள்ளாமலும் இருப்பதைக் கண்டு கவலையுற்றாலும், பிரச்சனை என்னவென்று விசாரிக்கத் துணிவில்லாத நாஹித், நசீரின் தம்பி அப்தியைக் கண்டு தன் கவலையைத் தெரிவிக்கிறாள். நசீர் தன் வாத்தியத்தோடு இருக்கும் வரையில் கவலையில்லை என்று அவளைத் தேற்ற முயற்சிக்கும் அப்தியிடம் மெல்ல தான் நசீரின் வாத்தியத்தை உடைத்து விட்டதை சொல்லுகிறாள் நாஹித்.
அதிர்ச்சியும் கோபமும் அடைந்தாலும் நசீரைக் காண உடனே வருவதாய் சொல்லுகிறான் அப்தி. ஆனால் அப்தியின் வருகையோ, கனவுக்கன்னிகளைக் குறித்த பேச்சுக்களோ நசீருக்கு உற்சாகம் அளிப்பதாயில்லை. படத்துக்கு போகலாம் என்று கூறும் அப்தியிடம் தான் இறக்க முடிவெடுத்ததை அறிவிக்கிறான் நசீர். நாஹித் தன் வீட்டுக்கு வந்ததை சொல்லும் அப்தி, நசீரின் நிலை குறித்து கவலை தெரிவிக்கிறான். பின்னர் நசீரின் குடும்பத்தாரும் தானும் அவன் மீது கொண்டிருக்கும் மதிப்பையும் பாசத்தையும் பற்றி இட்டுக்கட்டி அவனைத் தேற்ற முயலும் அப்தி, நான்கு குழந்தைகளுக்காகவாவது நசீர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று எடுத்துரைக்கிறான். கோபமடையும் நசீர் அலி, அப்தியைக் கடுமையாக விமர்சிக்கிறான். பின்னர் வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்கும் நசீர், தான் இறந்த பின்னர் அப்தி தன் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். இரவு கவிழ்கிறது. இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருக்கும் நசீருக்கு பசி மெல்ல மெல்ல தலையெடுக்கிறது. பிடித்த உணவைப் பற்றியும், கனவுக் கன்னியைப் பற்றியும் கனவு கண்டவாறே உறங்கிப் போகிறான் நசீர் அலி.
cwp_056மறுநாள் காலை நாஹித் அவனுக்குப் பிடித்த உணவான பிளம்ஸ் பழங்களோடு சமைத்த கோழியுடன் அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் வருகிறாள். ஆனால் பட்டினி கிடந்து நா உணர்வுகள் மரத்துப் போயிருக்கும் நசீர் ஒரு வாய் உணவிலேயே மறுதலிக்கிறான். தனது உணர்வுகள் அனைத்தும் மரத்துப் போகக் காரணம் நாஹித் தான் என குற்றம் சாட்டுகிறான். தன் வாத்தியத்தை உடைத்ததற்காக அவளை தான் என்றுமே மன்னிக்கப் போவதில்லை என்று கூறுகிறான். எட்டு வயதிலிருந்து நசீரை தான் காதலித்ததை நினைவு கூறும் நாஹித், தற்போது தங்களுக்குள் என்ன நடந்தது என்று கவலையுடன் கேட்கிறாள். அவள் என்ன சமாதானம் சொன்னாலும் நசீர் அலியின் கண் முன் அவள் அவனையும் அவன் இசையையும் வெறுப்பதாகச் சொல்லி அவனது வாத்தியத்தை உடைத்த தருணமே வந்துபோகிறது. நசீர் நாஹித்திடம் அவளை வெறுப்பதாகவும், அவளை என்றுமே அவன் நேசித்ததில்லையென்றும் கோபத்துடன் கூற நாஹித் மனமுடைந்து ஓடுகிறாள்.
 
cwp_014 - Copy
நசீரின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் காரணம் இருக்கவே செய்கிறது. இளவயதில் டார் கற்றுக்கொள்ள செல்லும் நசீர் அலி, இசையிடம் மட்டுமல்லாது ஒரு பெண்ணிடமும் தன் மனதைப் பறிகொடுக்கிறான். இசை கைகூடி வந்தாலும், அவனுக்கு காதல் கைகூடவில்லை. காதலியின் தந்தை ஒரு இசைக் கலைஞனுக்கு பெண் கொடுக்க மறுத்து விடுகிறான்.
இதை அறிந்து கொள்ளும் அவனது குரு நிறைவேறாத காதலே காவியமாகிறது என்று அவனைத் தேற்றி , அவனுக்கு தன்னுடைய குருவின் வாத்தியத்தைப் பரிசளிக்கிறார். அவனுடைய காதலியின் மேல் கொண்டிருக்கும் உணர்வுகள் இசையாக உருவெடுக்கும் என்றும், ஒவ்வொரு இசையிலும் அவள் இருப்பாள் என்றும் கூறுகிறார். நசீர் அலியின் மனதில் கரை புரண்டோடும் காதலும் சோகமும் அவனது விரல்களின் வழி இசையாக உருவெடுக்கிறது. தன் குரு தந்த வாத்தியத்தை தன் காதலியைப் போலவே மதிக்கிறான் நசீர் அலி. காலம் செல்கிறது. நசீர் அலி மிகப்பெரிய கலைஞன் ஆகிறான். தாயின் வற்புறுத்தலுக்கு இணங்கி தன் காதல் பற்றித் தெரிந்த நாஹித்தை மணக்கிறான். ஆனால் நாஹித்திடம் அவன் மனம் ஒட்டவில்லை. திருமணமும் அவனுக்கு எந்த விதமான சந்தோசத்தையும் தரவில்லை. பட்டுப் போன மரம் சிறிது சிறிதாக தன் இலைகளை இழப்பதைப் போல, சந்தோசம் அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகலுகிறது.cwp_074 - Copy
வாத்தியம் உடைந்ததும் துடித்துப் போகும் நசீர் அலி, தெருவொன்றில் சந்திக்கும் பெண்ணொருத்தியின் வார்த்தையில் உடைந்தே போகிறான். புதிய வாத்தியங்கள் எதுவும் அவனுக்கு தன்னுடைய பழைய வாத்தியத்தை நினைவுபடுத்துவதாயில்லை. குடும்பத்தால் அவனுக்கு குதூகலம் என்றும் இருந்ததில்லை. இத்தகைய சூழ்நிலையிலேயே தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான் நசீர் அலி. எட்டு நாட்களில் நடக்கும் சம்பவங்களும் அவன் முடிவுக்கு உறுதுணையாய் இருக்கிறது. அன்பில்லாத மனைவி, அக்கறை இல்லாத பிள்ளைகள், சந்தோசமில்லாத வாழக்கை, உடைந்த காதல், கலைந்த கனவுகள் என ஒவ்வொன்றாய் அவனை உறுத்துகிறது. ஆனால் கலைந்து போன கனவுகளின் நினைவில் அருகில் இருக்கும் வானவில்லை நம் கண்கள் காணத் தவறி விடுகின்றன. கதையில் அற்புதமான தருணமொன்று உண்டு. தனது குழந்தைகள் அனைத்திலும் தன்னை ஒத்திருக்கக் கூடியது தன் செல்ல மகள் பர்சானா தான் என்றும், தனது இளைய மகன் மொசாபருக்கும் தனக்கும் துளியளவும் ஒற்றுமையில்லை என்பதும் நசீர் அலியின் எண்ணம். ஐந்தாவது நாளின் இறுதியில் தான் இன்னும் உயிரோடு இருக்கக் காரணம் யாரோ ஒருவருடைய பிரார்த்தனை தான் என்றும், அது தனது மகள் பர்சானாவாகத் தான் இருக்கும் என்பதும் அவனது நம்பிக்கை. அது யார் எனக் காட்டப்படும் கட்டம், உணர்சிகரமானது.
 
cwp_019 
 
புத்தகத்தின் ஆசிரியர்/ ஓவியர் சத்ரபி (Marjane Satrapi) Persepolis கதையின் மூலம் பிரபலமானவர். இவரது ஓவியங்களில் குறைந்தபட்ச தகவல்களே இருக்கும். சிறுசிறு கோடுகளின் வழியாகவே கருப்பு வெள்ளையில் கதையை கண்முன் நிறுத்துவது இவரது பாணி. A minimalistic art style. சோகமானவொரு கதையை நகைச்சுவை கலந்து தரும் நுட்பம் இவரதுcwp_036 - Copy சிறப்பம்சம். மொசபர் பேருந்தில் செய்யும் ஆர்ப்பாட்டமோ , தற்செயலாகக் கேட்கும் வார்த்தையின் மூலம் நசீருக்கு ஏற்படும் மரண பயமோ இவரது கதையோட்டத்தில் கச்சிதமாக வெளிப்படுகிறது. கதையில் உணர்ச்சிகரமான சம்பவங்களுக்கு பஞ்சமே கிடையாது. கதை முடிவதற்கு முன்னரே கதாப்பாத்திரங்களை தெளிவாக உணர்ந்து கொள்ளுமாறு கதையை அமைப்பது சட்ரபியின் திறமைகளில் ஒன்று. தாயின் மரணம் குறித்தான கட்டம், மரண தேவனுடனான உரையாடல், துறவியின் சித்தாந்தம், ஐரீன் குறித்தான கடைசி பக்கங்கள் இவை எல்லாமே இதற்கான சான்றுகள்.
வாழ்க்கையில சில பாதைகள் முடிவில்லாதவை. சில பாதைகள் முடிவறிய முடியாதவை. முடிவு ஒன்று தான். மரண தேவனின் பார்வை மனிதனின் மீது நிலைத்திருப்பது போலவே, மனிதனின் பார்வை கனவுகளில் நிலைத்திருக்கிறது. கைகூடாத கனவுகளில் இருந்து கரையேற மறுபடியும் கனவுகளின் உதவியே தேவையாயிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு சோகம் இருக்கிறது. நசீர் அலியின் வாத்தியத்தைப் போலவே ஏதோவொன்று அவனையும் செலுத்துகிறது. உடைந்து போன கனவுகளைப் பிணைக்கும் நரம்புகள் அறுபடும் போது கருவி உடைவதல்ல கேள்வி. உடையும் வேளை என்னவென்பதே.
 
When the music stops, we’ve got to go.

















Comments

  1. Next post might be about 1984 and Persepolis.

    ReplyDelete
  2. Magnificent Article ... Keep Posting

    ReplyDelete
  3. கைதேர்ந்த கதை சொல்லியின் பக்குவத்தோடு அழகாக இப் பதிவு எழுதப்பட்டுள்ளது, இறுதிப் பந்தியின் ஒவ்வொரு வரிகளும் தத்துவார்த்தமானவை, பதிவின் கடைசிக்கு முந்திய பந்தியில் சுருக்கமாகவும் அழகான வாக்கியங்களிலும் தரப்பட்ட இப் புதகம் பற்றிய விளக்கம் இவ் வகையான புத்தகங்களின் அறிமுகமே கிடைதிராத ஒருவருக்கு க் கூடப் புரியும் வகையில் அமைந்துள்ளது,நல்ல பதிவு.

    ReplyDelete
  4. 1958, டெஹ்ரான்.. // என்ன ஒரு ஆரம்பம் .... சுபயோக சுபதினத்தை அப்டியே அள்ளி சாப்பிடுற மாதிரி :)

    ReplyDelete
    Replies
    1. ஷங்கர், உங்களுடைய இதே காமிக்ஸ் ரெவ்யு கூட இப்படித்தான் தொடங்கியது .. :) நேற்றுதான் பொய் படித்துப் பார்த்தேன். what a sync !

      Delete
    2. Ha ha... Because that is how the book starts too. Also, I have read shankar's review and maybe it did leave an impression on me. Everything aside, this is the best way to convey what a man Nasser is. If you run the risk of not stating what drives Nasser, he will sound like an arrogant, self centered, ungrateful wimp. I tried to convey what a man he is through the first line. If you could have understood the subtlety of that line, you probably would not need the rest of the para. But, not everyone would understand it and I extended it for easy understanding.

      Delete
    3. http://kanuvukalinkathalan.blogspot.com/2010/02/blog-post_14.html

      Shankar's post.

      Delete
  5. Next post might be about 1984 and Persepolis.

    #######

    இது தான் இலுமிக்கிட்ட புடிச்ச விஷயம். அடுத்துக் கொலை தான் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு செய்வாப்ல...

    ReplyDelete
    Replies
    1. சொல்லலைன்னா மட்டும்? நாலு வரி படிச்சுபுட்டு நாக்கு தள்ள கமெண்ட் போடுற பககியெல்லாம் பாலிடிக்ஸ் பண்ணுது. போயா யோவ். :)

      Delete
  6. By the way...this one is really good.

    ReplyDelete
  7. முதல் 6 பராக்களை படித்ததுமே தெஹ்ரானில் இருப்பது போல ஒரு உணர்வு உருவாவதை என்னால் உணர முடிகிறது.... :)

    ReplyDelete
    Replies
    1. என்ன இருந்தாலும் ஆறே வார்த்தைல கரப்பான பாக்குற மாதிரி எழுதுற திறமை நமக்கு வராது ஓய். எழவு அதுக்கு ஏதோ படிக்காம பராக்கு பாக்குற கும்பல்ல சேரணுமாமே. :)

      Delete
  8. கலைந்து போன கனவுகளின் நினைவில் அருகில் இருக்கும் வானவில்லை நம் கண்கள் காணத் தவறி விடுகின்றன.// அட அட அட.... அப்டியே அட்லாண்டிக் சமுத்திரத்திற்குள்ளே போய்ட்டா மாதிரி இருக்குங்க... :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியே மூச்சைப் பிடிச்சுகிட்டு முப்பது நிமிஷம் உள்ளேயே இரும். ரெண்டு மூணு நாள்ல பெருசா வருவீர். :P

      Delete
  9. கடேசிப் பரா..... அழுதிட்டேன்.... நீங்க நல்லா வருவீங்க சாரே :)

    ReplyDelete
    Replies
    1. எல்லா மொள்ளமாரிகளும் பூமாரி பொழிவதைப் பார்த்தால் சீக்கிரமே அறிவுசார் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து எழுத்தாளர் ஆகிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆதி காமிக்ஸ் அன்பர்கள் அறிவைக் கழற்றி வைத்து விட்டு அண்டா நிறைய பூவோடு வர வேண்டுகிறேன்.பிளான்க்செக் கொடுத்து விட்டு பாயைப் பிராண்ட தயாராயிருந்தால் இன்னும் வசதி. :)

      Delete
  10. நல்லா இருக்கு .... நம்பும் ...

    ReplyDelete
  11. /* வாழ்க்கையில சில பாதைகள் முடிவில்லாதவை. சில பாதைகள் முடிவறிய முடியாதவை. முடிவு ஒன்று தான். மரண தேவனின் பார்வை மனிதனின் மீது நிலைத்திருப்பது போலவே, மனிதனின் பார்வை கனவுகளில் நிலைத்திருக்கிறது. கைகூடாத கனவுகளில் இருந்து கரையேற மறுபடியும் கனவுகளின் உதவியே தேவையாயிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு சோகம் இருக்கிறது. நசீர் அலியின் வாத்தியத்தைப் போலவே ஏதோவொன்று அவனையும் செலுத்துகிறது. உடைந்து போன கனவுகளைப் பிணைக்கும் நரம்புகள் அறுபடும் போது கருவி உடைவதல்ல கேள்வி. உடையும் வேளை என்னவென்பதே. */

    This paragraph is one of the best I have read in Tamil ever ...! Kudos ...!

    ReplyDelete
  12. நல்ல வேளை புஸ்தகம் ஏழு டாலரு ...! உம்ம ரேகமண்டேஷனுக்கு பணம் கட்டி படிச்சே பாய ப்ராண்ட போறேன் ஒய் ...! சீக்கிரமே எனக்கு சோத்துக்கு படியளக்கவும் நீர் சம்பாதிக்க வேண்டும் என்பதை பெருமையுடன் தெரிவிச்சிக்கறேன் ... இதே ரேட்ல போனால் ....!

    ReplyDelete
  13. கதையை எளிமையாக விவரித்த விதம் நன்றாக உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. கதையா.. நல்லவேளை சொன்னீங்க!!:-)))

      Delete
    2. கதையெல்லாம் ஒன்னுமில்லைய்யா... அந்த பீப்பீ ஊதறவன் இலுமி தான்... நாம ஓட்டுவோம்னு டகால்டி விடறான்...!

      Delete
    3. கழட்டி அடிச்சவளுக்கு கடுதாசி எழுதுற அளவுக்கு நான் இன்னும் வளரல மச்சி... ;)

      Delete
  14. /* மனிதனின் பார்வை கனவுகளில் நிலைத்திருக்கிறது. கைகூடாத கனவுகளில் இருந்து கரையேற மறுபடியும் கனவுகளின் உதவியே தேவையாயிருக்கிறது.*/

    நம்மில் பலர் காமிக்ஸ் காதலர்களாய் இருப்பதற்கும் இது ஒரு காரணம். சிறு வயதினில் அன்றாட கவலைகள் (டீச்சர் திட்டுவது-அடிப்பது, தண்டனை வாங்கி தலை குனிந்து அவமானப்படுவது, வீட்டினில் மார்க் குறைந்தால் வரும் முறைப்பிலிருந்து தப்புவது இத்யாதி, இத்யாதி) நான் மறப்பதற்கு அப்போது தினமும் படித்திட்ட காமிக்ஸ் முழு முதல் காரணம். ஒரு மனவழுத்தம் வந்தால் உடனே அம்மாவிடம் கெஞ்சி, கூத்தாடி ஒரு அன்றைய தினம் வந்திட்ட காமிக்ஸ் வாங்கிப் படித்து கவலை மறந்த நினைவுகள் மீண்டெழுகின்றன!!

    ஓ ! அந்த நாட்கள் .....!

    [சரி அதெப்படி 30 காமிக்ஸ்?:
    Tinkle - 2,
    ACK - 2,
    Star Comics (DC reprints) - 4,
    Kiran Comics - 2,
    Indrajal - 2,
    Poonthalir - 2,
    Poonthalir ACK - 2,
    Lion/Thigil/Minilion (ஆதி காமிக்ஸ்)- 3,
    Tinkle Collection - 1,
    ACK Bumper Issue reprint - 1,
    Falcon Comics - 2,
    Raani Comics - 2,
    Diamond Comics - 2,
    Paico Classics - 1
    Miscellaneous -2 - LM Comics, SCIFUN etc etc ]

    ReplyDelete
  15. @சாக்: நமது ஊர்களில் எல்லாம் முக்கால்வாசி கட்டாயக் கல்யாணம் தானே. நிர்பந்தங்களால் நிச்சயிக்கப்பட்ட வாழ்க்கை. பெற்றோருக்காகவும் சுற்றாருக்காகவும் கட்டாயக் கல்யாணம். பின்னர் மனைவிக்காகவும் பிள்ளைக்காகவும் கட்டாய மணவாழ்க்கை. இதில் அன்பென்பதையே அறியாத நசீர் அலி யாருக்கு கடமைபட்டிருக்கிறான்? அவனைப் புரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்? அவன் மேல் உண்மையான எதிர்பார்ப்பில்லாத அன்பு செலுத்துபவர் எத்தனை பேர்?


    அவனுடைய மகனையும், அவனுடைய காதலியையும் தவிர்த்து அவனை மதிக்கவோ அன்பு காட்டவோ யார் இருக்கிறார்கள்? அவனது மகனைப் பற்றிப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவனுக்கு இல்லை. நசீர் அலி தன் வாழ்க்கையில் உண்மையிலேயே நேசிக்கும் விஷயங்கள் ரெண்டு மட்டுமே. அவனது காதலி இரன், அவளது நினைவில் ஊற்றெடுக்கும் இசை.

    தன் காதலியோடு சேர்ந்து வாழ முடியாவிட்டாலும் அவள் நினைவுகளிலாவது வாழ்ந்திருப்பது தான் வாழ்க்கையில் அவனுக்கு மிகப்பெரிய ஆறுதலே. காதலியின் நினைவில் தான் இல்லை என்பது தெரிந்த உடனேயே அவனுக்கு வாழ்க்கையில் பிடிப்பு போய் விடுகிறது. இசை நின்று விடுகிறது.

    நசீர் அலி பிறருக்காக வாழ வேண்டும் என்பது அவனது கடமை என்றால், அவன் மீது அன்பு செலுத்த வேண்டியது அவனது மனைவியின் கடமை இல்லையா? கல்யாணம் ஆன பின்பும், குழந்தைகள் பெற்ற பின்பும் அவன் காதலியின் நினைவிலேயே வாழ்கிறான் என்றால் ஒரு மனைவியாக அவள் தோற்று விட்டாள், தன் கடமையில் இருந்து அவள் வழுகி விட்டாள் என்று தானே அர்த்தம்?

    நசீர் அலி மனவுறுதி படைத்த மனிதன் அல்ல. மனவலிமை கொண்டவன் தற்கொலை செய்யும் முடிவை எளிதில் எடுக்க மாட்டான். அவன் ஒரு பிழைகள் உடைய, சராசரியான, பாசத்திற்கு ஏங்கும், எளிதில் உணர்சிவசப்படக்கூடிய மனிதன். அவனது ஏமாற்றத்திலும் உணர்ச்சி வசப்படுதலிலும் எடுக்கப்பட்ட ஒரு முடிவு ஏழு நாட்களில் மாறுவதற்கான காரணம் ஒன்று கூட கிடைக்கவில்லை எனும் போது உறுதி பெறுகிறது.

    இதைத் தான் //வெறுமை சூழ்ந்தழுத்தும் பாதையில் சோகநடை போட்டுக் கொண்டிருக்கிறான் ஈரானின் மிகச்சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவனான நசீர் அலி.// என்று பதிவின் முதல் வரியில் அமைத்திருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுண்டு. கனவுகள் கை கூடாமல் போனாலும் கூட அதில் இருந்து மீள இன்னொரு கனவின் உதவி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. கனவுகளே அற்றுப் போகும் சமயம் வரும்போது எதைக் கொண்டு வாழ்கையை செலுத்துவீர் என்பது தான் கதை எழுப்பும் கேள்வி.

    // கைகூடாத கனவுகளில் இருந்து கரையேற மறுபடியும் கனவுகளின் உதவியே தேவையாயிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு சோகம் இருக்கிறது. நசீர் அலியின் வாத்தியத்தைப் போலவே ஏதோவொன்று அவனையும் செலுத்துகிறது. உடைந்து போன கனவுகளைப் பிணைக்கும் நரம்புகள் அறுபடும் போது கருவி உடைவதல்ல கேள்வி. உடையும் வேளை என்னவென்பதே. //


    Posted in response to a discussion in facebook.

    ReplyDelete
    Replies
    1. நசீர் அலியின் மனைவி அவன் மீதுள்ள அன்பினால் அவனை மணம் செய்து கொண்டவளில்லை. தான் ஆசைப்பட்ட பொருளை அடையும் ஆசை மட்டுமே அவளுடைய உந்துகோல். உண்மையான பாசம் இருந்திருந்தால் மனைவியை அவன் மதித்திருப்பான். காதலியை மெல்ல மெல்ல மறந்திருப்பான்.

      கல்யாணம் ஆன பின்பும், குழந்தைகள் பெற்ற பின்பும் அவன் காதலியின் நினைவிலேயே வாழ்கிறான் என்றால் ஒரு மனைவியாக அவள் தோற்று விட்டாள், தன் கடமையில் இருந்து அவள் வழுகி விட்டாள் என்று தானே அர்த்தம்?

      தன் பிள்ளைகளில் அவன் அதிகம் நேசிப்பது பர்சானாவைத் தான். ஆனால் அவளும் தந்தையிடம் இருந்து தனக்குக் கிடைக்கும் அன்புக்காகவும், சலுகைகளுக்காகவும், பொருட்களுக்காகவும் அவனை நேசிப்பவள். மொசபர் மட்டுமே நசீர் அலியின் மீது உண்மையான அன்பு வைத்திருப்பவன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அதை புரிந்து கொள்ளும் பக்குவம் நசீருக்கு கிடையாது.

      சுயநலம் மிகுந்த மனிதர்களுக்கு ஊடே நசீரும் சுயநலம் மிகுந்த ஒரு மனிதன். அவ்வளவே. இதில் கடமைக்கோ, கடனுக்கா ஏது இடம்? மனிதனைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் பாசம் மட்டுமே. அன்பில்லாத வாழ்க்கையில் கடமைக்கோ பொறுப்பிற்கோ கட்டாயத்திற்கோ இருக்கும் மதிப்பு தான் என்ன?

      Delete
    2. வாழ்க்கையில் நீர் மதிக்கும், உயிராய் நினைக்கும் அனைத்தையும் இழந்த பின்னர் நீர் என்ன செய்வீர்?

      Delete
  16. சில சிறந்த படைப்புகளை புரிந்து ரசிக்க மனப்பக்குவம் தேவைப்படுகிறது. என் போன்ற பலருக்கு அந்தப் பக்குவம் வர ஆண்டுக்கணக்கில் கூட ஆகி விடுகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Punisher Max in Tamil.... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…