Wednesday, March 23, 2011

The Poet – கொலைஞன்….

 

poet

மரணம் குறித்தான உங்கள் எண்ணம் என்ன? மரணம் குறித்தான உங்கள் பார்வை என்ன வகையானது? அது முடிவு என்றா? ஒரு நீண்ட பயணத்தின் மற்றொரு திருப்பம் என்றா? துன்பமானது என்றா? இந்த உலகத்தின் தொல்லைகளில் இருந்து நிம்மதியளிக்க கூடியது என்றா?

எப்போதாவது மரணத்தை ஒருவனுடைய தொழிலாக  யோசித்ததுண்டா?சற்று முன்னரே தனது கணவனையோ,தந்தையையோ,தாயையோ,மகனையோ,சொந்தத்தையோ பறிகொடுத்த ஒருவரிடம் “இப்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டு அடிபட்டதுண்டா?

ஜாக் மெக்எவோய் ஒரு பத்திரிக்கையாளன். மரணம் குறித்த, குறிப்பாக கொலைகள் குறித்த செய்திகளை எழுதும் ஒரு பத்திரிக்கையாளன். மரணம் அவனது வாழ்வில் ஒரு அங்கம் மட்டுமல்ல, அதுவே அவனது தொழில் முறை வாழ்க்கையும் கூட. ஒருவரது மரணமே அவனுக்கு உணவளிக்கும் வேலை. மரணத்திற்கு அவனுக்குமான உறவு, ஒரு குயவனுக்கும் அவன் குடையும் பானைக்குமானது. கரடுமுரடான மண்ணை எடுத்து அதை குழைத்துக் குழைத்து அவன் பானையாக உருவாக்குவதைப் போலவே, கொடூரமான மரணங்களை எடுத்து அதை குழைத்து படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுமாறு தருவதே அவன் பணி.

தினசரி பிறரது மரணத்தை தேடி ஓடும் ஒருவனது வாழ்க்கை எத்தகையானதாக இருக்கும்? மரணத்தைப் பற்றிய அவனது கண்ணோட்டம் என்னவாக இருக்கும்? அவனுக்கு நெருங்கியவர்கள் மரணமடையும் போது அவனது எண்ணம் எத்தகயானதாக இருக்கும்? அதிலும் அவனது சொந்த இரட்டைய அண்ணன் தற்கொலை செய்து கொள்ளும் போது?

மரணத்தைக் குறித்த ஜாக் மெக்எவோயின் எண்ணம் வித்தியாசமானது. வாழ்க்கை முழுவதும் மரணத்தை தேடி ஓடும் ஜாக், அதனை கைக்கெட்டாத தூரத்தில் வைத்திருந்தால் அதன் பிடிகளில் இருந்து தப்பி விடலாம் என்று எண்ணுபவன். குறிப்பாக, மரணத்தின் மூலம் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்தும், அதனைத் தேடியே ஓடுவதன் மூலம் ஏற்படும் வெறுமையில் இருந்தும். ஆனால்,அவனது சித்தாந்தம் அவனைக் காப்பாற்றவில்லை. இரட்டையனான தனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதை அறிந்து கொள்ளும் போது அவன் உடைந்து போகவே செய்கிறான்.

அவனது அண்ணனான ஸான், போலீசாக பணிபுரிந்தவன். கொடூரக் கொலைகளையும், அதனை சில நேரம் காரணமேயின்றி பொழுதுபோக்கிற்காகக் கூட செய்யக்கூடிய கொடூரர்களையும் தேடி அலையும் வேலை அவனது. ஒருமுறை ஜாக்கிடம் பேசுகையில் ஸான், ‘ என்னைப் போன்ற ஒவ்வொரு போலீஸ்காரனுக்கும் ஒரு எல்லை உண்டு. அது அவன் பார்க்கும் மரணங்களால் நிச்சயிக்கப்படுகிறது. அதனை அவன் அடையும் கணத்தில் அவனால் அதற்கு மேலும் மரணத்தை எதிர்கொள்ள முடியாது போய் விடும். அதன்பின்னர் அவன் வேறு வேலைக்கு மாற்றல் பெறுவான் அல்லது தற்கொலை செய்து கொள்ளுவான்’ என்று கூறுகிறான். தனது அண்ணனின் தற்கொலையைக் கேட்கும் ஜாக்கிற்கு இதுவே நினைவிற்கு வருகிறது என்றாலும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பதை நம்ப மறுக்கிறான் ஜாக்.

சில நாட்களில், போலிஸ்காரர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை அலசும் கட்டுரை ஒன்றை எழுத எண்ணும் அவன், தன்னுடைய அண்ணனுடைய மரணத்தை ஆராயும் போது, அது தற்கொலை அல்ல என்று கண்டுபிடிக்கிறான். மேலும், தனது அண்ணனின் மரணத்தை ஒத்த வேறு சில மரணங்களையும் அவன் கண்டுபிடிக்கிறான். அனைத்துமே தற்கொலை என்று கருதப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றினூடே சில ஒற்றுமைகள் இருப்பதைக் காண்கிறான்.

கொல்லப்படும் அனைவரும் Edgar Allen Poe எழுதிய கவிதைகளின் வரிகளை தங்கள் தற்கொலை கடிதத்தில் எழுதிவிட்டு இறப்பதையும், அவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு தீர்க்கமுடியாத கொலை வழக்கை தீர்க்கப் போராடிக்கொண்டு, அதில் வெற்றி பெற இயலாமல், தீவிர மன சஞ்சலத்திற்கு ஆளானவர்கள் என்பதையும் கண்டுகொள்கிறான்.

இவர்களை எல்லாம் கொல்லும் அந்த கொலைகாரனை தேடிச் செல்ல விழைகிறான் ஜாக். அவனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் யத்தனிக்கிறான். ஆனால், அது சுலபமான வேலையில்லை. வேட்டையாடுபவனையே வேட்டையாடும் பயங்கரமான, கொலைகளை எல்லாம் தற்கொலைகளாக காட்டக்கூடிய அளவிற்கு புத்திசாலியுமான ஒரு மனிதன் குறித்தான தேடல் இது என்றாலும்,ஜாக் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. இவை அனைத்தையும் செய்யும் அந்த மனிதன் மனநிலை பிறழ்ந்தவனாக இருக்கவே செய்வான் என்றும், தான் வேட்டையாடுவது தெரியவரும் போது, அவனது வெறி எத்தகையானதாக மாறும் என்று தெரிந்துகொள்ள இயலாது என்பதையும்...

முன்னாள் பத்திரிகையாளனான மைகேல் கானல்லி (Michael Connelly) எழுதிய இக்கதை, serial killer ஒருவனைப் பற்றியது. பத்திரிக்கையாளனாக இருந்த போது கிட்டியிருக்கக் கூடிய அனுபவத்தின் காரணமாக, மைகேல் பத்திரிக்கை மற்றும் போலிஸ் உலகத்தினை திறம்பட விவரிக்கிறார். பத்திரிக்கை உலகத்தின் போட்டிகள், பிறரை ஏய்த்தேனும் புகழ் பெறத் துடிக்கும் நிருபர்கள்,deadlineகள்,  போலிஸ் மற்றும் FBI கடைபிடிக்கும் துப்பறியும் உத்திகள் என கதை முழுதும் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. பரபரப்பான அதே நேரம் ஆழமான கதை சொல்லலுக்கு இது உதவி செய்கிறது.

மனிதர்களுள் மிருகங்களாய் திரியும் சீரியல் கில்லர்களை பற்றிய தகவல்களும் அனேகம். முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் தேடல், கடைசி பக்கம் வரை தொடர்ந்தாலும், அலுப்பில்லாமல் இருப்பது கதையின் மிகப்பெரிய பலம். அருமையான தொடக்கம் என்பது எந்த ஒரு நாவலுக்குமே அரியதொரு விசயமாகும்.இந்நாவலின் முதல் பக்கம் தரும் தொடக்கமொன்றே மைகேலின் எழுத்தாளுமைக்கு சான்று. ஒரே பக்கத்தில் கதாநாயகனின் எண்ணவோட்டத்தையும், அவனது வாழ்கையையும்,அவனது வேலையையும், அது அவனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இவ்வளவு திறம்பட சொல்லுவது எளிதான விசயமல்ல. திணிக்கப்பட்டது போன்ற செயற்கையான முடிவைத் தவிர்த்துப் பார்த்தால், Poet உங்களை நிச்சயம் வசியப்படுத்துவான்.

 

Rating: 4/5.

Tuesday, March 1, 2011

Body of Lies - நம்பிக்கையின் மறுபக்கம்...

 

body-of-lies

Ridley Scott இயக்கத்தில் 2008 இல் வெளிவந்த இந்தப்படம், ஒரு மதத் தீவிரவாதியினை பிடிக்க முயலும் மூன்று உளவுத்துறை அதிகாரிகள் பற்றியது.

ரோஜெர் பெர்ரிஸ்(Roger Ferris) ஈராக்கில் தீவிரவாதிகளை வேட்டையாடும் ஒரு CIA அதிகாரி.அவனுடைய முக்கிய குறி, அல் சலீம்(Al-Saleem) எனப்படும் ஒரு மதத் தீவிரவாதி. ஒரு நாள், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அல் சலீம் பற்றிய ரகசியங்களை பகிரத் தயாராயிருக்கும் நசிர் என்னும் தீவிரவாதியை சந்திக்கும் ரோஜெர் அவன் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஜோர்டானில் இருக்கும் ஒரு ரகசியமான தீவிரவாத முகாமை கண்டுபிடிக்கிறான்.

Body-of-Lies_Mark-Strong_ ஜோர்டான் உளவுத்துறை தலைவர் ஹானி சலாமை (Hani Salaam) சந்திக்கும் ரோஜெர், அவனது உதவியோடு ஜோர்டானில் இருக்கும் சலீமின் ரகசிய முகாமை கண்காணிக்கவும், பின்னர் சலீமை பிடிக்கவும் திட்டமிடுகிறான். ஆனால், ரோஜெரின் மேலதிகாரி எட் ஹாஃப்மனுக்கு அது போதுமானதாயில்லை. ரோஜெருக்கு தெரியாமலேயே அவனுடன் பணிபுரியும் வேறொரு அதிகாரியின் துணைகொண்டு வேறொரு யுக்தியை கையாண்டு அம்முகாமுக்குள் ஒரு உளவாளியை அனுப்ப திட்டமிடுகிறான். ஆனால்,திட்டம் தோல்வியடைவது மட்டுமில்லாது தீவிரவாதிகளுக்கு தாங்கள் கண்காணிக்கப்படுவது தெரிந்துபோகக் கூடிய சூழ்நிலை உண்டாகிறது. இதனை ஹானியின் உதவியோடு தடுக்கும் ரோஜெர், இம்மாதிரியான காரியங்களை தனக்குத் தெரியாமல் எட் செய்வது குறித்து அவனுடன் சண்டை போடுகிறான். ஒரு நாள் மருத்துவமனை செல்லும் ரோஜெர் அங்கே ஆயிஷா (Golshifteh Farahani) என்னும் நர்சை கண்டு அவள் மேல் காதல் கொள்கிறான்.

இதற்கிடையே, கண்காணிப்பின் போது எடுக்கப் படும் புகைப்படங்களின் மூலம் தீவிரவாத முகாமில் இருக்கும் ஒருவனை(கராமி) அடையாளம் காணும் ஹானி, அவனை தனக்காக உளவு பார்க்க சம்மதிக்க Body Of Liesவைக்கிறான். இதனை அறிந்து கொள்ளும் எட், கராமியின் மூலம் அடுத்த வெடிகுண்டு தாக்குதல் எங்கே இருக்குமென அறிந்துகொள்ள ஆசைப்படுகிறான். இது கராமியின் உயிருக்கு ஆபத்தாய் விளையும் என்று மறுக்கும் ஹானி, கராமியை ஏதேனும் பெரிய விஷயத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறி மறுத்துவிடுகிறான்.

ஆனால் எட் இதை ஏற்காமல், (மறுபடியும்) ரோஜெருக்கு தெரியாமல், கராமியை கடத்த ஏற்பாடு செய்கிறான். திட்டம் மறுபடியும் தோற்கிறது. கராமி மற்ற தீவிரவாதிகளை உசார்படுத்த அவர்கள் தப்பிச் செல்லுகிறார்கள். எட்டின் இந்த முட்டாள்தனமான காரியத்தால் சலாமியை பிடிக்க முடியாது போனது குறித்து கோபப்படும் ஹானி, எட்டுடன் சேர்ந்து சதி செய்ததாக கூறி ரோஜெரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுகிறான்.

இதன் பிறகு,வாஷிங்டன் வந்து சேரும் ரோஜெர், சலாமியை பிடிக்க எட்டுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுக்கிறான். திட்டம் வெற்றி பெற்றதா, சலாமியை பிடிக்க முடிந்ததா,ஹானி ஒத்துழைத்தானா, கராமி என்னவானான் என்பது குறித்து பிந்தைய படம் பேசுகிறது.

படம் இதே பெயரைக் கொண்ட ஒரு நாவலின் படமாக்கமே என்றாலும், நாவலில் முக்கிய பங்கு வகித்த ரொமான்ஸ் இதில் குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதை மறுக்கவும் முடியாது. ரோஜெர்,ஆயிஷாவிற்கு இடையில் மலரும் காதல் Golshifte farahani (7)திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு இஸ்லாமியப் பெண்ணை ரோஜெர் காதலிப்பது கிளைமாக்ஸிற்காக திணிக்கப்பட்டதாக தெரிவது ஆச்சர்யமில்லையே. கவனிக்க: நாவலில் முக்கோணக் காதல் எனவும், மூவருமே அமெரிக்கர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆயிஷாவாக நடித்த Golshifteh Farahani நல்ல நடிகையே என்றாலும், அவருக்கு ஒதுக்கப்படும் நேரம் மிகக்குறைவே. 

இப்படத்தில் நல்ல கதையும்,திரைக்கதையும் இருந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துவது அருமையான நடிகர்கள் தான். மேலும், இப்படம் ஒரு கேரக்டர் ஸ்டடி போல அமைந்திருப்பது நடிப்புத் திறமையைக் காட்டும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. ரோஜெர், எட், ஹானி மூவருமே உளவு வேலை பார்பவர்கள் தான் என்றாலும் எந்த வகையிலும் ஒத்த குணமுடையவர்கள் அல்ல.

ரோஜெர்- The man who finds himself always side-stepped by his superior Ed. கஷ்டப்பட்டு திட்டமிட்டு அதனை செயல்படுத்தி வெற்றியடையப் போகும்போதெல்லாம் எட் போட்ட வேறேதோ ஒரு திட்டம் தன்னுடையதற்கு முட்டுக்கட்டையாவதைக் கண்டு கோபப்படும்,சண்டையிடும், அதற்க்கு மேல் ஏதும் செய்ய முடியாமல் அதை தாங்கிக்கொள்ளும் ஒரு டிபிகல் உளவதிகாரி. களத்தில் கஷ்டப்பட்டு உழைத்து, அதை எட்டின் அவசரக் குடுக்கைத்தனம் கெடுக்கும் போது கோபப்படுவதாகட்டும், பின்னர் ஹானியிடம் எட்டின் திட்டத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எடுத்துக்கூறி அவனது நம்பிக்கையை திரும்பப்பெற முயலும்போதாகட்டும், ஆயிஷாவை காதலிக்கும்போதாகட்டும் லியோனார்டோ டி காப்ரியோ திறமையான நடிப்பை வழங்குகிறார்.crowe-dicaprio-745583

அவசரக்குடுக்கை மேலதிகாரியாக ரஸ்ஸல் க்ரோவ். டி காப்ரியோ அளவிற்கு திரையில் வரவில்லையானாலும், டிகாப்ரியோவின் வெறுப்பை மட்டுமல்லாது பார்வையாளனது வெறுப்பை சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்.எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி கதாப்பாத்திரத்தோடு பொருந்திப் போன நடிப்பு.

body-of-lies-7 Body of Lies

ஜோர்டான் உளவுத்துறை தலைவர் ஹானி சலாமாக மார்க் ஸ்ட்ராங். பெயருக்கேற்றார் போன்றே ஸ்ட்ராங்கான நடிப்பு. சிறிது நேரமே வந்தாலும், டிகாப்ரியோவின் நடிப்பையும் தூக்கி சாப்பிடுகிறார். ஒரு உளவுத்துறை தலைவருக்குண்டான கம்பீரம், திறமை, குள்ளநரித்தனம், திமிர் என் அனைத்தையும் வெகு எளிதில் கண்முன் நிறுத்துகிறார். இவரது ஆரம்ப காட்சியில் ஆரம்பிக்கும் கம்பீரமான நடிப்பு கடைசி காட்சியின் கேலி வரையிலும் நிறைந்து நிற்கிறது. ரோஜெர் பொய் சொன்னான் என்ற கோபத்தில் உதவ மறுக்கும்போது, ரோஜெரை முதன் முதல் சந்திக்கும் போதும், தீவிரவாதி ஒருவனை கடத்தி அவனை கொல்லப்போவதாய் காட்டிக்கொண்டு, தனது சாமர்தியத்தாலும், குள்ளநரித்தனத்தாலும் அவனை மாற்றி தன்பக்கம் திருப்பும்போதும் இவரது பண்பட்ட நடிப்பு ஜொலிக்கிறது.Screen presence எளிதாக வந்துவிடுவதில்லை.ஆனால்,இவருக்கு வருகிறது. மேலும், சில ஷார்ப்பான வசனங்கள் இந்த கதாப்பாத்திரத்தை மேலும் தூக்கி நிறுத்துகிறது.

Roger: I thought you didn’t believe in toture Hani Pasha.

Hani: This is Punishment, my dear. It’s a very different thing.

 

Hani to Ed: You Americans, you are incapable of secrecy because you are a democracy. Real intelligence operations, they remain secret forever.

 

இப்படத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய விஷயம் ஒன்று உண்டென்றால், அது உளவுத்தொழிலின் அசிங்கங்களையும், துரோகங்களையும் வெளிப்படையாகச் சொன்னதேயாகும். மூன்று முக்கிய உளவுத்துறை நிபுணர்கள் இணைந்து ஒரு பணியில் ஈடுபடும்போதும் கூட பொய்யும், நம்பிக்கைதுரோகமும், அவசரக் குடுக்கைத்தனமும், தன் லாபத்திற்காக அடுத்தவரை உபயோகிப்பதுமே மிஞ்சுகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் உளவுத் தொழிலின் மறுப்பக்கம் இருப்பது பொய்யும், சுயலாபமுமே!

Rating: 7.5/10.

 

Note: பல நாட்கள் கழித்து ஒரு போஸ்ட்,அதிலும் (மாதங்களுக்கு பிறகு) ஒரு சினிமா போஸ்ட். Well,It’s good to be back. :)