மரணம் குறித்தான உங்கள் எண்ணம் என்ன? மரணம் குறித்தான உங்கள் பார்வை என்ன வகையானது? அது முடிவு என்றா? ஒரு நீண்ட பயணத்தின் மற்றொரு திருப்பம் என்றா? துன்பமானது என்றா? இந்த உலகத்தின் தொல்லைகளில் இருந்து நிம்மதியளிக்க கூடியது என்றா?
எப்போதாவது மரணத்தை ஒருவனுடைய தொழிலாக யோசித்ததுண்டா?சற்று முன்னரே தனது கணவனையோ,தந்தையையோ,தாயையோ,மகனையோ,சொந்தத்தையோ பறிகொடுத்த ஒருவரிடம் “இப்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டு அடிபட்டதுண்டா?
ஜாக் மெக்எவோய் ஒரு பத்திரிக்கையாளன். மரணம் குறித்த, குறிப்பாக கொலைகள் குறித்த செய்திகளை எழுதும் ஒரு பத்திரிக்கையாளன். மரணம் அவனது வாழ்வில் ஒரு அங்கம் மட்டுமல்ல, அதுவே அவனது தொழில் முறை வாழ்க்கையும் கூட. ஒருவரது மரணமே அவனுக்கு உணவளிக்கும் வேலை. மரணத்திற்கு அவனுக்குமான உறவு, ஒரு குயவனுக்கும் அவன் குடையும் பானைக்குமானது. கரடுமுரடான மண்ணை எடுத்து அதை குழைத்துக் குழைத்து அவன் பானையாக உருவாக்குவதைப் போலவே, கொடூரமான மரணங்களை எடுத்து அதை குழைத்து படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுமாறு தருவதே அவன் பணி.
தினசரி பிறரது மரணத்தை தேடி ஓடும் ஒருவனது வாழ்க்கை எத்தகையானதாக இருக்கும்? மரணத்தைப் பற்றிய அவனது கண்ணோட்டம் என்னவாக இருக்கும்? அவனுக்கு நெருங்கியவர்கள் மரணமடையும் போது அவனது எண்ணம் எத்தகயானதாக இருக்கும்? அதிலும் அவனது சொந்த இரட்டைய அண்ணன் தற்கொலை செய்து கொள்ளும் போது?
மரணத்தைக் குறித்த ஜாக் மெக்எவோயின் எண்ணம் வித்தியாசமானது. வாழ்க்கை முழுவதும் மரணத்தை தேடி ஓடும் ஜாக், அதனை கைக்கெட்டாத தூரத்தில் வைத்திருந்தால் அதன் பிடிகளில் இருந்து தப்பி விடலாம் என்று எண்ணுபவன். குறிப்பாக, மரணத்தின் மூலம் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்தும், அதனைத் தேடியே ஓடுவதன் மூலம் ஏற்படும் வெறுமையில் இருந்தும். ஆனால்,அவனது சித்தாந்தம் அவனைக் காப்பாற்றவில்லை. இரட்டையனான தனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதை அறிந்து கொள்ளும் போது அவன் உடைந்து போகவே செய்கிறான்.
அவனது அண்ணனான ஸான், போலீசாக பணிபுரிந்தவன். கொடூரக் கொலைகளையும், அதனை சில நேரம் காரணமேயின்றி பொழுதுபோக்கிற்காகக் கூட செய்யக்கூடிய கொடூரர்களையும் தேடி அலையும் வேலை அவனது. ஒருமுறை ஜாக்கிடம் பேசுகையில் ஸான், ‘ என்னைப் போன்ற ஒவ்வொரு போலீஸ்காரனுக்கும் ஒரு எல்லை உண்டு. அது அவன் பார்க்கும் மரணங்களால் நிச்சயிக்கப்படுகிறது. அதனை அவன் அடையும் கணத்தில் அவனால் அதற்கு மேலும் மரணத்தை எதிர்கொள்ள முடியாது போய் விடும். அதன்பின்னர் அவன் வேறு வேலைக்கு மாற்றல் பெறுவான் அல்லது தற்கொலை செய்து கொள்ளுவான்’ என்று கூறுகிறான். தனது அண்ணனின் தற்கொலையைக் கேட்கும் ஜாக்கிற்கு இதுவே நினைவிற்கு வருகிறது என்றாலும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பதை நம்ப மறுக்கிறான் ஜாக்.
சில நாட்களில், போலிஸ்காரர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை அலசும் கட்டுரை ஒன்றை எழுத எண்ணும் அவன், தன்னுடைய அண்ணனுடைய மரணத்தை ஆராயும் போது, அது தற்கொலை அல்ல என்று கண்டுபிடிக்கிறான். மேலும், தனது அண்ணனின் மரணத்தை ஒத்த வேறு சில மரணங்களையும் அவன் கண்டுபிடிக்கிறான். அனைத்துமே தற்கொலை என்று கருதப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றினூடே சில ஒற்றுமைகள் இருப்பதைக் காண்கிறான்.
கொல்லப்படும் அனைவரும் Edgar Allen Poe எழுதிய கவிதைகளின் வரிகளை தங்கள் தற்கொலை கடிதத்தில் எழுதிவிட்டு இறப்பதையும், அவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு தீர்க்கமுடியாத கொலை வழக்கை தீர்க்கப் போராடிக்கொண்டு, அதில் வெற்றி பெற இயலாமல், தீவிர மன சஞ்சலத்திற்கு ஆளானவர்கள் என்பதையும் கண்டுகொள்கிறான்.
இவர்களை எல்லாம் கொல்லும் அந்த கொலைகாரனை தேடிச் செல்ல விழைகிறான் ஜாக். அவனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் யத்தனிக்கிறான். ஆனால், அது சுலபமான வேலையில்லை. வேட்டையாடுபவனையே வேட்டையாடும் பயங்கரமான, கொலைகளை எல்லாம் தற்கொலைகளாக காட்டக்கூடிய அளவிற்கு புத்திசாலியுமான ஒரு மனிதன் குறித்தான தேடல் இது என்றாலும்,ஜாக் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. இவை அனைத்தையும் செய்யும் அந்த மனிதன் மனநிலை பிறழ்ந்தவனாக இருக்கவே செய்வான் என்றும், தான் வேட்டையாடுவது தெரியவரும் போது, அவனது வெறி எத்தகையானதாக மாறும் என்று தெரிந்துகொள்ள இயலாது என்பதையும்...
முன்னாள் பத்திரிகையாளனான மைகேல் கானல்லி (Michael Connelly) எழுதிய இக்கதை, serial killer ஒருவனைப் பற்றியது. பத்திரிக்கையாளனாக இருந்த போது கிட்டியிருக்கக் கூடிய அனுபவத்தின் காரணமாக, மைகேல் பத்திரிக்கை மற்றும் போலிஸ் உலகத்தினை திறம்பட விவரிக்கிறார். பத்திரிக்கை உலகத்தின் போட்டிகள், பிறரை ஏய்த்தேனும் புகழ் பெறத் துடிக்கும் நிருபர்கள்,deadlineகள், போலிஸ் மற்றும் FBI கடைபிடிக்கும் துப்பறியும் உத்திகள் என கதை முழுதும் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. பரபரப்பான அதே நேரம் ஆழமான கதை சொல்லலுக்கு இது உதவி செய்கிறது.
மனிதர்களுள் மிருகங்களாய் திரியும் சீரியல் கில்லர்களை பற்றிய தகவல்களும் அனேகம். முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் தேடல், கடைசி பக்கம் வரை தொடர்ந்தாலும், அலுப்பில்லாமல் இருப்பது கதையின் மிகப்பெரிய பலம். அருமையான தொடக்கம் என்பது எந்த ஒரு நாவலுக்குமே அரியதொரு விசயமாகும்.இந்நாவலின் முதல் பக்கம் தரும் தொடக்கமொன்றே மைகேலின் எழுத்தாளுமைக்கு சான்று. ஒரே பக்கத்தில் கதாநாயகனின் எண்ணவோட்டத்தையும், அவனது வாழ்கையையும்,அவனது வேலையையும், அது அவனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இவ்வளவு திறம்பட சொல்லுவது எளிதான விசயமல்ல. திணிக்கப்பட்டது போன்ற செயற்கையான முடிவைத் தவிர்த்துப் பார்த்தால், Poet உங்களை நிச்சயம் வசியப்படுத்துவான்.
Rating: 4/5.