1950....
ரத்தமும் சத்தமும் நிறைந்த போர்க்களம். பயம், கோபம், வெறி, பற்று, கையாலாகத்தனம், வீரம்,மனிதம், நம்பிக்கை எனப் பற்பல உணர்ச்சிகளும் மடியும் இடம். வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்குமான போரில் வட கொரியா அசுர பலத்தோடு முன்னேறிக் கொண்டிருக்க, ஆட்பலமோ ஆதரவோ இல்லாமல் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக பின்னேறிக் கொண்டிருந்த சமயத்தில் தொடங்குகிறது கதை.
போர்க்களத்தில் இருந்து பின்னேறி வரும் கமாண்டர் கங் சக்-தே (Kang Suk-Dae), ஆட்பற்றாக்குறையாலும், மேலதிகாரிகளின்
உத்தரவாலும் முக்கியக் கேந்திரமான போஹாங் பள்ளிக்கூடத்தை போர் அனுபவமோ, ஆயுதப் பழக்கமோ இல்லாத மாணவ சிப்பாய்களின் பாதுகாப்பில் விட்டு முக்கியப் போர் நடக்கவிருக்கும் நாக்டோங் நதிப்பகுதிக்கு விரைகிறார். போஹாங் பள்ளியில் நிறுவப்படும் 71 மாணவர்களில் போரை நேரில் கண்டவர்கள் மொத்தம் மூன்று பேரே. அவர்களில் ஒருவனான ஒஹ் ஜங் ப்யோம் (Oh Jung Beom) தளத்தலைவனாக கங்கால் நியமிக்கப்படுகிறான். அவனுக்கு கொடுக்கப்படும் பணியானது போஹாங் தளத்தை பாதுகாத்து முடிந்த அளவுக்கு நாக்டோக் நதியை நோக்கிய எதிரிகளின் முன்னேற்றத்தை தடுப்பது.
அனுபவமற்ற மாணவக் கூட்டத்திற்கு இடையே ஒரு போக்கிரிக் கும்பலும் உண்டு. அதிர்ந்தும் பேசாதவனான ப்யோம் தலைவனாக நியமிக்கப்பட்டதில் கம்யூனிஸ்ட்களை அறவே வெறுக்கும் சங்-வூவிற்கு ஒப்புதல் இல்லை. இருவருக்குமான மோதல், வரவிருக்கும் அபாயம் குறித்தான அறிதலே இல்லாத மாணவர்களின் கும்மாளங்கள், தாக்குதல், உயிர் இழப்புகள், பின்னர் போர் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது படத்தின் மிகுதிப் பகுதி.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புனையப்பட்ட இக்கதை, 71 மாணவர்கள் எதிரிகளை பதினோரு மணி நேரம் தடுத்து நிறுத்திய சம்பவத்தை வழக்கமான வகையில் காட்சிப்படுத்துகிறது. கூக்குரல்களும் கூற்றவனின் கொக்கரிப்புமாக முதல் காட்சி நம்முள் ஏற்படுத்தும் பாதிப்பு அனேகம். உயிரை விடுவதற்கு உற்ற காரணம் என்று ஒன்று உண்டா என்ன? அது தேசப்பற்றாகவே இருந்தாலும்? போர்க்களத்தில் தொடங்கி கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு போரின் கொடுமையையும், போர்க்களத்தின் வலிகளையும் காட்டும் ஆரம்பக் காட்சிகள் சோகக் கவிதை என்றாலும் அதற்குப் பின்பாக கதை மரண காயப்பட்ட சிப்பாயைப் போல நொண்டியடிப்பது பரிதாபகரமான விஷயமே. பார்த்துப் பார்த்து சலித்த பல விஷயங்கள் இப்படத்திலும் உண்டு. சண்டைக் காட்சிகளின் காட்சியமைப்பு ரத்தமும் கண்ணீரும் வழிய அருமையான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொரியப் படங்களின் தனிப் பலமான திரைக்கதைக்கும், கதாப்பாத்திரப் படைப்பாக்கத்திற்க்கும் அதையே சொல்லிவிட முடியாது. கொரியப் படங்களின் பாத்திரங்கள் படம் முடியும் முன்னர் கண்ணீர் சிந்தவோ, கள்வெறி சந்தோசத்தையோ தரும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். கல்லெறியும் விதத்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்கான காரணம் பூர்த்தி ஆகாத, யூகிக்கூடிய பாத்திர அமைப்புகளும், திரைக்கதையுமாகவே இருக்கும். படத்தின் ஆரம்பத்தில் மனதை கனக்கச் செய்யும் வண்ணம் சவங்கள் கொடுத்த அளவு உணர்வு கூட கடைசிச் சண்டையில் ஏற்படவில்லை என்பதே படத்தின் வன்மைக்கு ஒரு சான்று.
வழக்கம் போலவே நடிகர்களின் பங்களிப்பு அபாரமானது என்றாலும், மூழ்கும் தோணியில் முத்தெடுப்பது சிரமமான காரியமல்லவா? இருந்தாலும், வட கொரிய கமாண்டராக வரும் Cha Seung-won இன் நடிப்பு கவனிக்கத்தக்கது. ராணுவ மிடுக்கையும் மீறி அகங்காரம் எட்டிப் பார்க்கும் பாத்திரம். மிக எளிதாக செய்திருக்கிறார். அருமையான காட்சியமைப்பு கொண்ட போர்ப்படம் ஒன்றைப் பார்க்கும் ஆர்வமிருந்தால் இப்படத்தைப் பார்க்கலாம். குறிப்பாக முதல் சண்டைக் காட்சி. ஆனால், காட்சியமைப்புக்கும் மேலாக திரைக்கதையை மதிப்பவராக இருந்தால் வேறொரு படத்தை தேடித் போவதே நலம்.
71 Into the fire – Not enough....
Rating: 2/5.